×

அரசு மருத்துவமனையில்தான் பிரசவம் நடக்க வேண்டும் என்ற மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய மானாமதுரை எம்எல்ஏ

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனையில் மானாமதுரை எம்.எல்.ஏ நாகராஜனின் மனைவிக்கு பிரசவம் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினராக உள்ள எஸ்.நாகராஜன், கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார்.

கடந்த 2003-ம் ஆண்டு திருமணமான, நாகராஜனுக்கு திருமணமாகி 16 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. தற்போது 16 வருடங்களுக்குப் பிறகு கருவுற்ற தனது மனைவிக்கு, தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பரிசோதித்து வந்தார். இந்நிலையில் அவர் பிரசவத்திற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 9-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த சிவசங்கரி நேற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து எம்எல்ஏ எஸ்.நாகராஜன் கூறுகையில், எனது மனைவி எப்போதும் எளிமையை விரும்பக் கூடியவர். அவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பதையே விரும்பினார். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அவரது குடும்பத்தாரே அரசு மருத்துவமனைக்கு செல்லாவிட்டால் பொதுமக்களுக்கு எப்படி நம்பிகை ஏற்படும். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவே அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். மேலும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அதிக கவனம் செலுத்துகின்றனர். தனியார் மருத்துவமனை போல் அனைத்து வசதிகளும் உள்ளன என்று கூறியுள்ளார்.



Tags : Manamadurai MLA ,Government Hospital ,Sivagangai ,MLA , Government Hospital, Sivagangai, MLA
× RELATED பயணிகளுடன் வந்த பேருந்தில் தீ