கான்பெரா: ஆஸ்திரேலியாவில் 2019-2020 காலகட்டத்தில் சுமார் 38,000 இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 60% அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஏராளமான இந்தியர்கள் உலகின் பல நாடுகளிலும் குடியேறி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் கடந்த சில ஆண்டுகளாக குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2019-2020ம் ஆண்டில் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்களின் தரவுகளை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 2019-2020 ஆண்டு காலகட்டத்தில் மட்டும் சுமார் 2,00,000 பேர் ஆஸ்திரேலிய குடியுரிமைப் பெற்றுள்ளனர். இதில் இந்தியர்களே தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றனர். 2 லட்சம் பேரில் 38,000 இந்தியர்கள் அந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 60% அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கு அடுத்தபடியாக 25,011 பிரிட்டன் நாட்டவர்கள், 14,764 சீனர்கள் மற்றும் 8,821 பாகிஸ்தானியர்கள் ஆகியோரும் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ளனர். தற்போதைய கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியிலும் ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆன்லைன் மூலம் இதுவரை 60,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய குடியுரிமைத்துறை அமைச்சர் ஆலன் டட்ஜ் கூறுகையில் இது எங்கள் வெற்றிகரமான பன்முக கலாச்சார தேசத்துடன் ஒன்றிணைவதற்கான விருப்பத்தை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.