சின்ஜியாங்: மூன்று மாதங்களுக்குப் பிறகு சீனாவில் 100க்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் கொரோனா நோய்த்தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாகக் கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள ஓர் இறைச்சி சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதன் விளைவாக பெய்ஜிங்கில் கொரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சின்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டப் பரவலை அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு கொரோனா பரவல் மெல்லத் தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள சீனாவின் சுகாதார அமைப்பு, சீனாவில் கடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று 100க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 89 பேருக்கு உள்ளூரிலேயே தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சின்ஜியாங் மாகாணத்தைச் சேந்தவர்கள். உரும்கி நகரில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 15 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் யாரும் இறக்கவில்லை, என கூறியுள்ளது.