×

உணவு தேடி வீட்டிற்குள் நுழைய முயன்றபோது ஜன்னல் கம்பியில் சிக்கிய குரங்கு: குரங்கு கூட்டம் கூடியதால் பரபரப்பு

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே உணவு தேடி வீட்டிற்குள் நுழைய முயன்ற குரங்கு ஜன்னல்கம்பியில் மாட்டி போராடிய சம்பவம் நடந்துள்ளது. திருப்புத்தூர் கணேஷ்நகர் பகுதியில் குரங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. நேற்று  மாலை ஒரு வீட்டின் பின்புற ஜன்னல் வழியாக குரங்கு ஒன்று உணவு தேடி வீட்டின் உள்ளே நுழைய முயன்றது. அப்பொழுது அந்த குரங்கின் தலை ஜன்னல் கம்பியின் நடுவே மாட்டிக்கொண்டது. ஜன்னல் கம்பியின் நடுவே மாட்டிய குரங்கு வலி தாங்க முடியாமல் அதிக சத்தம் எழுப்பியது. சத்தம் கேட்ட அனைத்து குரங்குகளும் அந்த வீடு நோக்கி வந்து கூச்சலிட ஆரம்பித்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் திருப்புத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஜன்னல் நடுவே மாட்டியிருந்த குரங்கை எந்தவித காயமும் இன்றி பத்திரமாக  மீட்டனர். மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்று குரங்குகள் உணவுக்காக வீட்டின் உள்ளே வந்து செல்வது வாடிக்கையாக இருந்தாலும்,  குரங்கு ஜன்னல் கம்பியில் நடுவே மாட்டியது  வேதனையான விஷயம் என்று தெரிவித்தனர்.

Tags : window bar ,house , Window wire, monkey, monkey crowd
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை