பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு - கர்நாடக எல்லைகளில் ஒன்றான அத்திப்பள்ளி என்ற இடத்தில் ஏராளமான போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய பாஸ் இல்லாதவர்கள் பெங்களூரு நகரத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. கர்நாடக மாநிலத்தில் வைரஸ் பரவலின் எண்ணிக்கையானது தினந்தோறும் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் புதிய உச்சமாக 5,536 நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தினந்தோறும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கர்நாடக அரசு அனைத்து எல்லை பகுதிகளிலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு - கர்நாடக எல்லைகளில் ஒன்றான அத்திப்பள்ளி சோதனைச்சாவடியில் அதிகாரிகள் காலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் பெங்களூரு நகரில் நுழைய உரிய அடையாள அட்டையை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல நான்கு சக்கர வாகனத்தில் உரிய பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
அவ்வாறு பாஸ் இல்லையெனில் அவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்புகின்றனர். தொடர்ந்து உரிய பாஸ் பெற்று பெங்களூருவில் நுழையும் ஒவ்வொருவருக்கும் கைகளில் சீல் வைக்கப்பட்டு, அவர்கள் தங்களுடைய வீடுகளில் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கேரளா, மஹாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து எல்லை பகுதிகளிலும் இதேபோல கண்காணிப்பு பணியை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. எல்லை பகுதியில் காவல்துறையினர் மட்டும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது வருவாய்த்துறை, சுகாதாரத்துறை என 14 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.