புதுடெல்லி: சர்வதேச பயணிகள் விமானப்போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்ப 4 ஆண்டுகள் வரையில் ஆகும் என, சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. கொரொனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில், வணிகம், சுற்றுலா என அனைத்து துறைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சர்வதேச விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கைகளால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்த நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாகவும், நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாகவும் விமான நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அவற்றில், ஊழியர்கள் பணி நீக்கம், ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுப்பு, பணி நேரத்தை அதிகரித்தல், சம்பளமற்ற பணி வழங்குதல் என பல்வேறு அதிரடி முடிவுகளும் அடங்கும். இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து சேவை கொரோனாவுக்கு முந்தைய இயல்பு நிலையை அடைய குறைந்தது 4 ஆண்டுகள் தேவைப்படும் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம்(ஐஏடிஏ) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் நடப்பாண்டில் உள்ளூர் விமானப் போக்குவரத்து சேவை சுமார் 86. 5 சதவீதமும், சர்வதேச விமானப்போக்குவரத்து சேவை சுமார் 97 சதவீதமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2023ம் ஆண்டில் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் என கூறப்பட்ட நிலையில், 2024வரை தற்போதைய நிலை நீடிக்கலாம் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.