பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் வழி பேரன் சதீஷ் (13). இவன் நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் கிராமத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றான். அப்போது, சதீஷ் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் முழ்கினான். இதனை பார்த்த சக நண்பர்கள் கிராமத்திற்கு சென்று தகவல் தெரிவித்தனர். கிராம மக்கள் வந்து கிணற்றில் தேடி பார்த்தும் சிறுவன் கிடைக்காததால், பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த சுமார் ஒரு மணி நேரம் போராடி சிறுவனை இறந்த நிலையில் மீட்டனர். தகவல் அறிந்த, ஆர்.கே.பேட்டை போலீசார் இறந்த மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.