×

கொரோனா வார்டில் உணவு தட்டுப்பாடு நோயாளிகள் பரபரப்பு புகார்

சென்னை: சென்னை தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் கொரோனா வார்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். உணவு பொருள் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகளுக்கு உணவுகள் உரிய நேரத்தில் வழங்கப்படாமலும் குறைவாகவும் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் கூறுகையில், எனக்கும் மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இங்குள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறேன்.

ஆனால் இங்கு நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவுகள் வழங்காமல், பலமணி நேரம் கழித்தே தாமதமாக  உணவு தரப்படுகிறது. மூன்று வேளையும் எங்களுக்கு நேரத்திற்கு உணவு வழங்காததால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் மயக்கம், தலைசுற்றல் போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். ஏற்கனவே, கொரோனா நோயால் பலவீனமாக உள்ள நாங்கள் காலை உணவு 10 மணிக்கும், மதிய உணவு 3:30 மணிக்கும், இரவு உணவு 10 மணிக்கும் தரப்படுவதால் பசியால் வாடுகிறோம். எனவே, சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு உரிய நேரத்தில் மூன்று வேளையும் உணவு கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Corona Ward , Corona Ward, food shortages, patients, complaint
× RELATED கோவை இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா...