×

நாகர்கோவிலில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தலைமறைவு: 3 தனிப்படை தேடுகிறது

நாகர்கோவில்: நாகர்கோவிலில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குபதிவு செய்து, அவரை தேடி வருகிறார்கள். நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி (10ம் வகுப்பு மாணவி) கடந்த சில நாட்களுக்கு முன் மாயமானார். அவரை வாலிபர் ஒருவர் கடத்தி சென்று விட்டதாக, மாணவியின் தந்தை நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாணவியை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முன் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் அளித்த ரகசிய வாக்குமூலத்தில், தாயார் தன்னை தவறான பாதைக்கு அழைத்து செல்வதாகவும், ஏற்கனவே நாகர்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உள்பட 4 பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறினார்.

இதையடுத்து, நாஞ்சில் முருகேசனிடம் விசாரணை நடத்த புத்தேரிக்கு சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. இதனால், அவரது வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்றும் அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. மேலும் மாணவியின் ரகசிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை பாலியல் கொடுமை செய்த பறக்கையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை நேற்று மதியம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர, நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ சட்டப்பிரிவின்கீழ் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நாஞ்சில் முருகேசன், கடந்த 2011-2016-ம் ஆண்டுகளில் நாகர்கோவில் எம்.எல்.ஏ.வாக இருந்தார். அதிமுகவில் மாவட்ட செயலாளர், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குபின், டி.டி.வி. தினகரன் அணியில் இருந்த இவர் பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். ஆனால், பாலியல் வழக்கில் சிக்கியதாக போலீசார், அதிமுக தலைமைக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில், நேற்றுமுன்தினம் இரவு திடீரென இவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

* தாய் உள்பட 4 பேர் கைது
சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பியூலாபெல் ஜெனகா அளித்த புகாரின் அடிப்படையில் நாஞ்சில் முருகேசன், சிறுமியின் தாயார் உள்பட 5 பேர் மீது போக்சோ சட்டப்பிரிவு உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சிறுமியின் தாயார் மற்றும் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.


Tags : AIADMK ,Nagercoil Disappearance ,Nagercoil , Nagercoil: A 15-year-old girl was sexually assaulted by a former AIADMK MLA. , Occult, 3 personal
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...