சென்னை: உணவு துறை அமைச்சர் காமராஜ் நேற்று பாண்டிபஜார், தியாகராயா சாலை மற்றும் மேத்தா நகர், ஹாரிங்டன் சாலை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கொரோனா மருத்துவ முகாம்களை நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுர மருந்து, கையேடு ஆகியவற்றை வழங்கினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாக பயோமெட்ரிக் பதிவுகள் செய்வதற்குரிய வசதிகள் ஏற்படுத்தி விடுவோம். அக்டோபர் 1 முதல் ஒன் நேசன் ஒன் கார்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக பயோமெட்ரிக் பணிகள் முடிந்து விடும். ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மற்றும் முதலாளிகள் மீது கடுமையான குண்டர் சட்டம் பாயும் என்பதால் அதற்கு பயந்து அந்த தொழிலை செய்வதில் இருந்து விட்டு விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.