மேலூர்: மேலூர் அருகே கருங்காலக்குடியில் உள்ள கால்நடை மருத்துவமனை, பழமையான கட்டிடத்தில் இயங்கி வந்தது. பல ஆண்டுகளாக மோசமான நிலையிலேயே இருந்த இக்கட்டிடம் குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலர்களிடமும், ஒன்றிய அதிகாரிகளிடமும் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களாக அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது.
இதனால் நேற்று முன்தினம் இரவில் இந்த மருத்துவமனையில் மேற்கூரை, சிலாப் இடிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. நேற்று காலை பணிக்கு உதவி மருத்துவர் மற்றும் ஊழியர்கள் வந்த போது தான் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த தகவல் தெரிந்தது. இனி மேலாவது அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.