சென்னை: தமிழகத்தில் சின்னத்துரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளிக்க திரைத்துறையினர் அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்த இயக்குனர் பாரதிராஜா, சுரேஷ், காமாட்சி உள்ளிட்டோர் இதுகுறித்த கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பாரதிராஜா, தங்களுடைய கஷ்டங்களை அமைச்சரிடம் சொல்லியிருப்பதாகவும், அவர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. கொரோனா ஊரடங்கு காரணமாக திரையுலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பெரிய திரை, சின்னத்திரை மட்டுமல்லாது அதை நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கான தொழில்நுட்ப ஊழியர்களும் வேலைவாய்ப்பின்றி அல்லல் பட்டு வருகின்றனர்.
எனவே சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டது. தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 6வது கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், திரைப்படப் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் படங்களை வெளியிடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.