×

முன்கூட்டியே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளது: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

டெல்லி: கொரோனா பரவுவதை தடுக்க முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட செயல்திறன் மிக்க நடவடிக்கைகள் காரணமாக பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

உலக ஹெப்படைடிஸ் தினத்தையொட்டி நடைபெற்ற 2-வது புரிதல் மின்னணு-மாநாட்டில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா சிறப்பு விருந்தினராகவும், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் ஒத்துழைப்புடன், கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவனம், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்றுப் பேசிய ஹர்ஷ் வர்தன், இந்த ஆண்டு மாநாட்டின் மையக் கருத்து, கோவிட் காலகட்டத்தில் உங்களது கல்லீரலைப் பாதுகாப்பாக பராமரிப்பீர் என்பது, மிகவும் பொருத்தமானது என்பதோடு, தற்போதுள்ள சோதனையான காலகட்டத்தில் மிகவும் அவசியமானது என்றார். பிரதமரின் ஆலோசனையின்படி, முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட செயல்திறன் மிக்க நடவடிக்கைகள் காரணமாக, கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கையும் 2 முதல் 3 சதவீதமாக உள்ளதுடன், பெரும்பாலான பாதிப்புகள் முன் அறிகுறிகள் இல்லாதவை என்றும், நோயின் தன்மை மற்றும் நீரிழிவு, உடல்பருமன் மற்றும் கொழுப்பு மிகந்த கல்லீரல், நாள்பட்ட கல்லீரல் பாதிப்பு போன்ற இணைநோய்கள் உள்ளவர்களால் ஏற்படும் உயிரிழப்பு அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம். இதுபோன்ற பாதிப்புகளைக் கண்டறிய, ஆயுஷ்மான் பாரத் – சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் அயராது பணியாற்றி வருகின்றன என்றார்.

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, சமுதாயத்தை ஒன்று திரட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஹர்ஷ் வர்தன், “ஹெபடைடிஸ் உலகளாவிய சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஹெபடைடிஸ் தொற்று இந்தியாவில் மிகவும் பொதுவான மற்றும் கொடிய நோய் என்றாலும், சுகாதார சேவைகளை வழங்குவோருக்கும், சாமான்ய மக்களுக்கும் இதன் கொடூரம் தெரியாமல் உள்ளது. ஹெபடைடிஸ் பி மற்றும் சி தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு, கல்லீரல் புற்றுநோய் மற்றும் நாள்பட்ட கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருவதோடு, நாள்பட்ட ஹெபடைடிஸ் தொற்று பாதிப்பு உள்ளவர்களில் 80 சதவீதம் பேர், அந்தத் தொற்று தங்களை பாதித்துள்ளது என்பதை அறியாமல் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.



Tags : Harsh Vardhan ,corona spread ,Corona , Harsh Vardhan, Corona
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...