×

காரைக்குடி அருகே டாஸ்மாக் சுவரில் துளையிட்டு ரூ.7,000 மது பாட்டில்கள் திருட்டு: 3வது முறையாக நுழைந்த ‘குடிமகன்கள்’ கைது

காரைக்குடி: காரைக்குடி அருகே சுவரில் துளையிட்டு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். ரூ.7 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லலில் நேற்று அதிகாலை எஸ்ஐ சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், டூவீலரில் இருந்த அட்டை பெட்டியை போலீசார் பிரித்து பார்த்தனர். அதில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தன. இதையடுத்து இருவரையும் கல்லல் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில், கல்லல் அருகே சடையம்பட்டியை சேர்ந்த பாலமுருகன்(32), செம்மனூரை சேர்ந்த சந்தியாகு (61) என்பது தெரியவந்தது. இருவரும் கல்லல் ரயில் நிலையம் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் சுவரை துளையிட்டு மது பாட்டில்களை திருடியதும் தெரியவந்தது. மேலும் இதே கடையில் இவர்கள் சுவரை துளையிட்டு கடந்த ஆண்டு ரூ.32 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களையும், கடந்த 14ம் தேதி ரூ.11 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களையும்  திருடியது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் மற்றும் அரிவாள், கத்தி, கம்பி, சுத்தியல் போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.


Tags : wall ,Tasmag ,Karaikudi: 'Citizens , Karaikudi, Tasmak, citizens arrested
× RELATED மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து...