×

தஞ்சையில் குடிமராமத்து பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு...! : ஒப்பந்தக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென பெ.மணியரசன் தலைமையில் போராட்டம்!!!

தஞ்சாவூர்:  தஞ்சாவூரில் குடிமராமத்து பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக பெ.மணியரசன் தலைமையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியை அடுத்த ஆச்சாம்பட்டியில் ஏரியை தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக, பெ.மணியரசன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது செங்கிப்பட்டியை அடுத்த ஆச்சாம்பட்டியில் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய ஏரி ஒன்று அமைந்துள்ளது.

இந்த ஏரியை தூர்வாருவதற்காக சுமார் 40 லட்சம் ரூபாய் அளவில் தனியார் நிறுவனத்திடம் டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஏரியை முறையாக தூர்வாராமல், சுமார் 38 லட்சம் ரூபாய் கொள்ளையடித்திருப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், ஏரியில் பல்வேறு குமிழிகளை உடைத்ததால் தண்ணீரானது விவசாயத்திற்கு பயனளிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால், முறைகேட்டில் ஈடுபட்ட டெண்டர் உரிமையாளர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  கூறியுள்ளனர்.

இதற்காக ஐ.ஏ.எஸ் தலைமையில் தனி குழுவை அமைத்து குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி தற்போது போராட்டமானது பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து, ஏரியின் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைவாக செய்து முடிக்கவேண்டும் என பெ.மணியரசன் அவர்கள் மாவட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Tanjore ,P. Maniyarasan ,contractors , Tanjore ,P. Maniyarasan
× RELATED தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு...