×

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்வீட்

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தி திரைப்பட உலகை ஆதிக்க சக்திகள் ஆட்டி படைப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்துவது போல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனக்கு வரவேண்டிய இந்தி சினிமா வாய்ப்புகள் தடுக்கப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார். திட்டமிட்டு ஒரு கும்பல் தனக்கு எதிராக சதி செய்வதாகவும் ரகுமான் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளனர் என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலகளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் திரு. ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது. எல்லைகளில்லா இசையை எல்லைகள் கடந்து இயக்கி இந்தியாவிற்கே புகழ் சேர்த்த நமது இசைப்புயல் திரு. ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள். அவருக்கு என்னுடைய மனப்பூர்வமான ஆதரவை பதிவு செய்து கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.


Tags : SB Velumani ,AR Raghuvan ,SP Velumani ,AR Rahman , AR Rahman, Bollywood, Minister SP Velumani
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...