பெரம்பூர்: கொடுங்கையூர் எழில் நகர் 1வது தெருவில் இருந்து 18வது தெரு வரை உள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக சரிவர குடிநீர் வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த பகுதியில் லாரி தண்ணீர் கேட்டு
பொதுமக்கள் குடிநீர் வாரியத்தை அணுகினர். அந்த வகையில் நேற்று லாரி தண்ணீர் வர தாமதமானதால் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மணலி சாலையில் திடீரென மறியல் செய்ய வந்தனர். இதுகுறித்து, தகவலறிந்த கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் ஏழுமலை சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக லாரி தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். மேலும், தடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.அதன்பேரில் பொதுமக்கள் அந்த பகுதியில் இருந்து கலைந்துசென்றனர்.