திருமலை: ஐதராபாத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை கிரிக்கெட் வீரர் சச்சின் மற்றும் நடிகை நயன்தாரா உட்பட பலருக்கு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக ரியல் எஸ்டேட் இயக்குனர் குற்றம் சாட்டியுள்ளார். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் கோட்டா ரெட்டி, ரியல் எஸ்டேட் நிறுவனர். இந்த நிறுவனத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் இயக்குனராக சுதீர்ரெட்டி பதவி வகித்து வந்தார். இவர்கள் 2 பேரும் உறவினர்கள். இந்நிலையில், இவர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் பல முக்கிய பிரமுகர்களை ஏமாற்றி பல கோடி ரூபாய்க்கு புறம்போக்கு நிலத்தை விற்பனை செய்தது அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் சுதீர்ரெட்டி நேற்று கூறியதாவது:
ஐதராபாத் ரங்காரெட்டி மாவட்டம், மகேஸ்வரம் மண்டலம், ராவுரியாலா கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றியுள்ள எப்.டி.எல்.நிலம் (புல் டேங்க் லெவல்) பகுதியில் கட்டிடங்கள் கட்ட அனுமதியில்லை. இதை மறைத்து அப்பகுதி விவசாயிகள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு ஏக்கர் நிலத்தை ரூ.5 லட்சத்திற்கு கோட்டாரெட்டி விலைக்கு வாங்கினார். பின்னர், அதனை ஒரு ஏக்கர் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்தார். இதில், கடந்த 2008ம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி ஆகியோரிடம் 6.5 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தார்.
இதேபோல், கடந்த ஜூன் மாதத்தில் நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணனுக்கு தலா ஒரு ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தார். மேலும், ஆந்திராவை சேர்ந்த 5 எம்பிக்களுக்கும் விற்பனை செய்தார். விற்பனை செய்யும் போது அரசுக்கு சொந்தமான நிலம் என தெரிவிக்காமல் மோசடி செய்தார். இவ்வாறு அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் மட்டுமே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக இந்த உண்மை நிலவரம் வெளியே வந்துள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.