புதுடெல்லி: ஏற்கனவே தடை செய்யப்பட்ட டிக்டாக் உள்ளிட்ட ஆப்களின் போலிகளாக
உருவாக்கப்பட்ட மேலும் 47 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
லடாக் விவகாரத்தை தொடர்ந்து டிக் டாக், யூசி பிரவுசர், ஹலோ, ஷேர் இட்
உள்ளிட்ட 59 சீன மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, அரசின் மற்றும் மக்களின்
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியதால் இந்த 59 ஆப்களுக்கு தடை
விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்த ஆப்கள் கூகுள் பிளே
ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டன. ஆனாலும், நடவடிக்கை எடுக்கப்பட்ட சில
நாட்களில் டிக்டாக் லைட், ஹலோ லைட், ஷேர் இட் லைட் என குறுக்கு வழியில்
குளோனிங் (ஒரிஜினல் செயலியைப் போல இயங்கும் போலி) மூலம் மீண்டும்
இந்தியாவுக்குள் நுழையத்தொடங்கின.
இந்நிலையில், டிக்டாக் லைட்,
ஹலோ லைட், ஷேர் இட் லைட் உள்பட 47 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தற்போது தடை
விதித்துள்ளது. இந்திய அரசின் தொழில்நுட்ப கொள்கை மற்றும் தகவல் பாதுகாப்பு
விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 47 சீன
செயலிகளுக்கான தடை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 31ம் தேதி
வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த தடையின் மூலம் மத்திய அரசு தடை
விதித்துள்ள சீன ஆப்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.
* பப்ஜிக்கு ஆப்பு?
இதற்கிடையே,
சீனாவின் மேலும் 275 ஆப்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக தகவல்கள்
வெளியாகி உள்ளன. இதில் அதிகளவில் இளைஞர்கள் விளையாடும் பப்ஜி போன்ற
ஆப்களும் அடங்கும். இவற்றை தடை செய்வது குறித்து தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு
வருகிறது. விரைவில் இவைகளுக்கும் தடை விதிக்கப்படலாம் என மத்திய அரசு
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.