லண்டன்: கொரோனா பீதி காரணமாக தள்ளி வைக்கப்பட்ட யு எஸ் ஓபன், ஆக.31ம் தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க முன்னணி வீரர்கள் பலரும், தயக்கம் காட்டுகின்றனர். அதனால், போட்டி நடைபெறும் நியூயார்க் நகரில் வீரர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று நிர்வாகிள் தெரிவித்துள்ளனர். போட்டிகள் மூடிய அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும். இந்நிலையில் உலகின் முன்னாள் முதல் நிலை ஆட்டக்காரரும், ந;ட்சத்திர வீரருமான மர்ரே சமூக ஊடகமொன்றில் உரையாடியபோது, ‘ நான்கைந்து வாரங்களுக்கு முன்பு யு எஸ் ஓபனில் பங்கேற்பது குறித்து மிகவும் சந்தேகமாக தான் இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் மனரீதியாக தயாராக வேண்டியது கட்டாயம். அதற்கு தேவையான வகையில் திட்டங்களையும், பயிற்சிகளையும் தொடங்கத்தான் வேண்டும். சற்று பயமாக இருந்தாலும் யு எஸ் ஓபன் தொடங்குவதற்கு முன்பு நிலைமை மாறும் என்று நினைக்கிறேன்’ என்றார்.