தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் அருகே விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறையினரை கைது செய்யும் வரை உடலை வாங்கப்போவதில்லை என்று உறவினர்கள் 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம் வாகைக்கரையை சேர்ந்த முத்து என்பவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வனத்துறையினரின் விசாரணைக்குக்காக அளித்து செல்லப்பட்டார். பின்னர் விசாரணையின்போது விவசாயி முத்து மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதனால், வனத்துறை தாக்கியதாலேயே விவசாயி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில், வனத்துறையினரை கைது செய்யும் வரை உடலை வாங்கப்போவதில்லை என உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே திமுக நிர்வாகிகள் சிலர் அணைக்கரை முத்துவின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, உயிரிழந்த அணைக்கரை முத்துவின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரண தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் சம்மந்தப்பட்ட வனத்துறையினரை கைது செய்யும் வரை முத்துவின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.