திருவனந்தபுரம்: கோவிட் 19 தொற்று காலத்தில் தனது வேலையை இழக்க, வேறு வேலை தேடிக் கொண்டிருந்த அனுஜித், வேலை தேடுவதற்காகக் கடந்த வாரம் செல்லும்போது சாலை விபத்தில் பாதிக்கப்பட்டார். அவரது மூளை செயலிழந்துவிட்டதாகக் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை அறிவித்தது. இதனையடுத்து அனுஜித்தின் ஆசைப்படி, அவரது இரு விழிப்படலங்கள், இதயம், இரு சிறுநீரகங்கள், சிறுகுடல் மற்றும் கைகள் ஆகியவை எட்டு பேருக்கு தானம் அளிக்கப்பட்டுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து பலநூறு உயிர்களைக் காப்பாற்றினார். இப்போது விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் எட்டு பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அனுஜித் மரணத்திற்குப் பிறகு எட்டு பேரின் உடலில் உயிர் வாழ்கிறார்.
கடந்த 2010ஆம் ஆண்டு கேரளாவின் கொட்டாரக்கரை அருகே ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு இளைஞர் சிவப்பு நிற பையுடன் ஓடி வந்து கொண்டிருந்தான். டிரைவருக்கு விபரீதம் புரிய ஆரம்பித்தது. உடனே ரயிலை நிறுத்தினார். இறங்கி சென்று பார்த்த போது ரயில் தண்டவாளத்தில் இருந்த விரிசலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார் ரயில் ஓட்டுநர். ரயிலை நிறுத்தி விபத்து ஏற்படாமல் காப்பாற்றிய இளைஞர் அனுஜித்.
அனுஜித்தின் மனைவி பிரின்ஸி, சகோதரி அஜல்யா ஆகியோர் அனுஜித்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதயம், சிறுநீரகங்கள், கை எலும்புகள், சிறுகுடல் போன்றவை எட்டு பேருக்கு பொருத்தப்பட்டது.அனுஜித்தின் மனைவி பிரின்ஸி தனியார் நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான். அம்மா விஜயகுமாரி, அப்பா சசிதரன்பிள்ளை ஆகியோர் அடங்கிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் அனுஜித். மரணத்திற்குப் பின்னரும் எட்டு பேருக்கு வாழ்வளித்த அனுஜித்தை கேரளமே போற்றி வருகிறது.