×

நளினி, முருகன் வாட்ஸ் அப் காலில் பேச அனுமதிகோரிய வழக்கு!: ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்குமாறு மத்திய அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை!

சென்னை: வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் நளினி மற்றும் முருகன் வீடியோ காலில் பேசுவதற்கு 1 நாள் மட்டும் அனுமதி வழங்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, முருகன் வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் வாட்ஸ் அப் காலில் பேச அனுமதிக்குமாறு நளினியின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடைசியாக விசாரணைக்கு வந்த போது, நளினியின் தாயார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வீடியோ காலில் பேச அனைத்து கைதிகளுக்கும் அனுமதி வழங்கும் போது, நளினி, முருகனுக்கும் அனுமதி மறுக்கப்படுவது சட்ட விரோதமானது என தெரிவித்தார். மேலும் கொரோனா காலத்தில் கைதிகளுடன் உறவினர்கள் பேச அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டார். தொடர்ந்து,  இதுகுறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும், வெளியுறவு அமைச்சகத்தின் பதிலை எதிர்பார்த்திருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது பாதுகாப்பு காரணங்களுக்காக கைதிகளை வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடம் பேச அனுமதிப்பதில்லை என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நளினி மற்றும் முருகனுக்கு வெளிநாட்டில் உள்ளவர்களிடம் பேச ஒரு நாள் மட்டும் அனுமதி அளிக்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். எந்த நாளில் அனுமதி வழங்கப்படும் என்பதை வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

Tags : Murugan ,Nalini ,High Court ,relatives , High Court m Murugan, Nalini m
× RELATED முருகன் பாஸ்போர்ட் பெற நேர்காணலுக்கு...