ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே முகவூர் பகுதியிலுள்ள தொண்டைமான் குளத்தில் மீன் பிடிக்கும்போது மீன் வலையில் மலைப்பாம்பு சிக்கி வருகிறது. இதுவரை 5 மலைப்பாம்புகள் பிடிபட்டுள்ளன. நேற்றுமுன்தினம் இரவு தொண்டைமான் குளம் அருகே சென்ற பொதுமக்கள் மலைப்பாம்பு நடமாட்டத்தை கண்டவுடன் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், வனத்துறையினர் வருவதற்கு முன்பாகவே மலைப்பாம்பை பொதுமக்கள் பிடித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொதுமக்களிடமிருந்த 6 அடி நீளமுள்ள மலைபாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். குடியிருப்பு பகுதியில் அருகே உள்ள குளத்தில் தொடர்ந்து மலைப்பாம்பு சிக்குவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இந்த குளத்தை தூர்வாரி குப்பைகளை அகற்றுவதன் மூலம் மலைப்பாம்பு நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.