திருமயம்: திருமயத்தில் சுற்றுலாதளமான மலைக்கோட்டை வீதியை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாதளங்ளில் திருமயம் மலைக்கோட்டை முக்கியமானதாக கருதப்படுகிறது. இங்கு புகழ் பெற்ற குடைவரை கோயில், பெருமாள், சிவன் கோயில்கள் உள்ளதால் இதனை காண உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வாசிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கோட்டையானது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கோட்டையை சுற்றி வரும் முக்கிய வீதியான மேற்கு வீதியில் தனிபர் வீதியின் பாதியளவுக்கு கம்பி கேட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது கோட்டையை சுற்றி வரும் சுற்றுலாவாசிகள், வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வந்தனர். எனவே திருமயம் ஊராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட நபரிடம் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை அகற்ற வலியுறுத்தியும், இதுவரை சம்பந்தப்பட்ட நபர் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமயம் மலைக்கோட்டை பகுதியை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு தரும் வகையில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.