சென்னை: தமிழகத்தில் 89 இஞ்ஜினியரிங் கல்லூரிகள் தரமற்றவை என்றும் தரமற்ற கல்லூரிகள் என்று வகைப்படுத்தப்பட்ட 12 கல்லூரிகள் காஞ்சிபுரத்திலும், 7 கல்லூரிகள் கோவையிலும் உள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த கல்லூரிகளை கவுன்சிலிங்கின் போது தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தரமற்ற கல்லூரிகள் மீது 25 முதல் 100 சதவீத மாணவர் சேர்க்கையை நிறுத்தும் அளவிலான நடவடிக்கைகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாக பரவி வருகின்றன.
இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில், சமூக வலைத்தளங்களில், அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இணைவுக் கல்லூரிகளில், 89 கல்லூரிகள் தரமற்றது என்றும் அவற்றின் பெயர், TNEA Code No மற்றும் ஏனைய தகவல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது.
அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இணைவுக் கல்லூரிகளில் இது போன்ற தரமற்ற கல்லூரிகள்/ தரமான கல்லூரிகள் என்று பாகுபாடு செய்யவில்லை என்றும் 89 கல்லூரிகளின் பெயர் பட்டியல் குறித்த தகவல்களை வெளியிடவில்லை என்றும் தெரிவித்துக்கொள்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.