×

திருப்பதியில் மின்சார கம்பியில் மோதி இளைஞர் பலி!: இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக சிசிடிவி பதிவுகள் வெளியீடு!!!

திருப்பதி:  திருப்பதியில் மின்சார கம்பத்தில் மோதி இளைஞர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி அசோக் நகரில் முரளி கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். முரளி தற்போது ஏழுமலையான் கோவிலில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அனுதீப். 22 வயதுடைய இந்த இளைஞர் பிசிஏ இரண்டாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், அனுதீப் சனிக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது பிரகாசம் சாலை வழியாக, நான்கு கால் மண்டபம் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையின் தடுப்பு சுவரில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தில் மோதியதால் இளைஞர் அங்கேயே தூக்கிஎறியப்பட்டார். பின்னர் அனுதீப்புடன் வந்த மற்ற நண்பர்கள் அவரை அங்கிருந்து தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர நிலையில் சிகிச்சை பெற்று வந்த அனுதீப் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் விபத்து நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகள் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதில், கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் வேகமாக மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், இதுகுறித்து போலீசார் கூறுகையில், இளைஞர்கள் அனைவரும் வாகனத்தில் பொறுமையாக செல்ல வேண்டும், கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும், தங்களுடைய குடும்பத்தை கருத்தில் கொண்டு மிகவும் கவனமாக வண்டியை ஓட்ட வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை கூறியுள்ளார். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : accident ,Tirupati Youth ,Tirupati ,CCTV , Youth killed, Tirupati, CCTV footage ,accident ,
× RELATED தெலுங்கானா விபத்து: சாலையோரம் நின்ற...