மதுரை: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதானவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் குழுவினர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்நிலையில், விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ள சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டது. இதனால், முன்னதாகவே விசாரணையை முடித்துக்கொண்டு, குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ள மற்றொரு சிபிஐ அதிகாரியான சுசில்குமார் (36) என்பவருக்கும் கொரோனா தொற்று நேற்று காலை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ அதிகாரிகளின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதனால், விசாரணையில் காலதாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ``விசாரணை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், விசாரணைக்கு எந்தப்பாதிப்பும் ஏற்படாது. அதிகாரிகள் பாதிக்கப்பட்டது குறித்து, டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து விட்டோம். மாற்று அதிகாரிகள் நியமிக்கப்படுவது குறித்து மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றனர். இதற்கிடையே கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.