காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் கொரோனாவுக்கு முதல் நபராக ஒருவர் பலியானதையடுத்து ஊரடங்கு ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், கொரோனா நோய்த் தொற்றால் இதுவரை 512 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 357 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், கொரோனாவில் இருந்து 142 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்றுவரை அங்கு யாரும் பலியாகாத நிலையில், கொரோனா பாதித்த 74 வயது முதியவர் இன்று மருத்துவமனையில் பலியானார். இதனையடுத்து, இன்றுடன் அங்கு ஊரடங்கு முடிவடையும் நிலையில், மாநிலத்தில் முதல் பலி பதிவானதையடுத்து, ஊரடங்கு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில தலைமை செயலர் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது: நிலைமையை தீவிரமாக பரிசீலித்த பின், ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.