×

முந்தைய ஆண்டுகளின் கட் ஆஃப் மதிப்பெண் வெளியாகவில்லை!: பொறியியல் படிப்பை தேர்வு செய்யவுள்ள மாணவர்கள் குழப்பம்..அரசு தலையிட கோரிக்கை..!!

சென்னை: முந்தைய ஆண்டுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் விவரங்களை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிடாமல் உள்ளதால் பொறியியல் படிப்பை தேர்வு செய்யவுள்ள மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த 15ம் தேதி முதல் பெறப்படுகின்றன. கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 10ம் தேதியிலிருந்து தொடங்கவுள்ள நிலையில், முந்தைய ஆண்டுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் விவரம் இன்னும் இணையத்தில் வெளியிடவில்லை.

இதனால் பொறியியல் படிப்பில் எந்த துறையை தேர்வு செய்வது என்பதில் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வி ஆலோசகர் தெரிவித்ததாவது, இந்த ஆண்டு டி.என்.இ.ஏ. ஆன்லைன் இணையதளத்தில் முந்தைய ஆண்டுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த விவரங்கள் தெரியாத காரணத்தினால் மாணவர்கள் தாங்கள் எடுத்துள்ள மதிப்பெண்களுக்கு தாங்கள் விரும்பும் பாடப்பிரிவிற்கு எந்தெந்த கல்லூரிகளில் எல்லாம் சீட்டு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு முறை செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் போதும், தேர்வு முடிந்த சில வாரங்களில் அந்த தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் அடிப்படையிலான கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது. கடந்த 2019 மார்ச் மாதம் வரை நடந்த தேர்வுகளுக்கான கல்லூரிகளின் மதிப்பெண்கள் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் கடந்த 2019 நவம்பர் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுக்கான கல்லூரிகளின் மதிப்பெண்கள் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த காரணத்தால் இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்லூரிகளின் தரத்தை அறிய முடியாமல் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தவித்து வருகின்றனர். எனவே பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல்களை உடனே வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags : Cut off score, engineering, students
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...