புதுச்சேரி: புதுச்சேரி அருகே மணல் திருட்டை தடுக்க சென்ற போலீசார் மீது வாகனம் ஏற்றி தப்பிச்சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் உள்ள சங்கராபரணி ஆற்றில் சிலர் மணல் திருடுவதாக திருக்கனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் காவலர் ராஜராஜன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றுள்ளனர். அப்போது மணல் திருடிவிட்டு வேகமாக சென்ற மினி லாரியை போலீசார் தடுத்துள்ளனர். அப்போது, போலீசார் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு காலிலும், காவலர் ராஜராஜனுக்கு கையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர்கள் இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மினிலாரியில் இருந்து இறங்கி தப்பியோடியுள்ளனர். இதையடுத்து, திருட்டி மணலுடன் இருந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் போலீசார் மீது லாரியை ஏற்றிவிட்டு தப்பிச்சென்று ஓடியது கூனிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவா, மணி, ரஞ்சித் என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அந்த கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.