சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வுகள் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.ஆனால் கொரோனா் காரணமாக நீட் தேர்வில் பங்கெடுக்க மாணவர்களும், பெற்றோர்களும் பெருமளவில் விரும்பவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை 10, 11ம் வகுப்புகளுக்கான தேர்வு நடத்தாமல் அனைவரும் தேர்வு பெற்றதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதை தவிர கல்லூரிக்கான செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்திருக்கிறது. இவற்றுக்கெல்லாம் தேர்வு நடத்த முடியாத நிலையில் நீட் தேர்வை எப்படி நடத்த முடியும்? நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு கடந்தாண்டு 412 பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தியது.
அவர்களில் ஒரு மாணவருக்குக் கூட மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. மேலும் நடப்பாண்டில் இதுவரை பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்தவில்லை. இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் எப்படி வெற்றி பெற முடியும்? தமிழகத்திலுள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்கள், நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் நடப்பாண்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். மத்திய பாஜக அரசின் நீட் தேர்வு திணிப்பை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக அரசால் தடுக்க முடியவில்லை எனில், நீட் தேர்வை தடுக்க எத்தகைய போராட்ட வழி முறைகளை கையாள்வது என்பது குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.