×

விசாரணைக்கு சென்ற சாத்தான்குளம் வாலிபர் சாவு: சகோதரர், உறவினர்களிடம் சிபிசிஐடி 6 மணி நேரம் விசாரணை: வாக்குமூலம் வீடியோவில் பதிவு

சாத்தான்குளம்:  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே தெற்கு பேய்க்குளத்தில் கடந்த மே 18ம் தேதி ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜெயக்குமார் (39) கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சுந்தரம் மகன் துரையை போலீசார் தேடிவந்தனர். அவர் சிக்காததால் அவரது  தம்பி கட்டிடத் தொழிலாளி மகேந்திரனை (27) கடந்த மே 23ம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த மகேந்திரன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்  ஜூன் 13ம் தேதி உயிரிழந்தார்.  இதற்கிடையே சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் தாக்கியதில் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். இதில் இன்ஸ்பெக்டர் தர் உள்ளிட்ட 10பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குபதிந்து கைது செய்தனர்.

 இந்நிலையில், மகேந்திரனின் தாயார் வடிவு ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில்  சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி அணில்குமார் தலைமையிலான போலீசார் மகேந்திரன் குடும்பத்தினரிடம் தூத்துக்குடியில் 2 நாட்களாக  விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து மகேந்திரன் சொந்த ஊரான பேய்க்குளத்திற்கு நேற்று மதியம்  டிஎஸ்பி அணில்குமார் தலைமையிலான போலீசார் வந்து மகேந்திரன் சகோதரர் துரையை அழைத்து விசாரணை நடத்தினர். மேலும் உறவினர்களிடமும் விசாரணை நடந்தது.  6 மணி நேரம் நடந்த விசாரணையை  வீடியோ காட்சியாக பதிவு செய்து கொண்டனர்.


Tags : Death ,Sathankulam ,interrogation ,brother ,relatives ,CBCID 6 ,Sathankulam Valipar , Sathankulam, Valipar Chavu, Brother, Relatives, CBCID, Confession
× RELATED இன்ஸ்டா படுத்தும்பாடு… குளத்தில்...