×

தக்காளி பயிரிட பணம் இல்லாததால் 2 மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத விவசாயி: ஆந்திராவில் பரிதாபம்

திருமலை: ஆந்திராவில் தக்காளி பயிரிட போதிய பணம் இல்லாததால், தனது 2 மகள்களை கலப்பையில் பூட்டி நிலத்தை ஒரு விவசாயி உழுத சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், விவசாயிகள் விவசாயத்தை தொடங்கியுள்ளனர். மதனபல்லியை சேர்ந்தவர் விவசாயி நாகேஸ்வர ராவ். இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் தக்காளி பயிரிட முடிவு செய்தார். ஆனால், ஏற்கனவே விளைவித்த தக்காளியை கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்க முடியாததால், கடும்  நஷ்டத்தை சந்தித்தார். இதனால், மீண்டும் தக்காளி பயிரிட போதிய பணம் இல்லாத நிலை ஏற்பட்டது.

இதனால், என்ன செய்வது என்று யோசித்த அவர், நேற்று தனது இரண்டு  மகள்களை பயன்படுத்தி நிலத்தை உழுது சீர் செய்தார். தொடர்ந்து அவரது மனைவி விதைகளை தூவினார். இதை அவ்வழியாக சென்றவர்கள் கண்டு சோகத்தில் ஆழ்ந்தனர். இது குறித்து நாகேஸ்வரராவ் கூறுகையில், ‘‘எனக்கு சொந்தமான விவசாய பூமியை எனது தாயைப்போல் நினைப்பதால் குடும்பத்தாருடன் விவசாயம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது,’’ என்றார்.

Tags : daughters ,land ,Andhra , Tomato, 2 daughters, farmer, Andhra
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!