புதுடெல்லி: ‘தற்போதைய சூழலில், உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடத்த சாத்தியமில்லை,’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ,வழக்கு விசாரணைகளை காணொலி மூலம் மட்டுமே உச்ச நீதிமன்றம், நடத்தி வருகிறது. இதனிடையே, பல்வேறு மாநிலங்களில் எஸ்சி, எஸ்டி ஊழியர்களுக்கு பதவி உயர்வு ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மனுக்களை நேரடியாக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது, `தற்போது கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வழக்குகளை நேரடியாக விசாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை,’ என கூறிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, இது பற்றி பரிசீலிப்பதற்காக 7 நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்தார். மூத்த நீதிபதி என்.வி. ரமணா தலைமையில், இக்குழு நியமிக்கப்பட்டது.
இந்த குழு நேற்று முன்தினம் பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் துஷ்யந்த் தேவே ஆகியோரை அழைத்து ஆலோசித்தது. இதில், ‘தற்போதைய சூழலில் உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடத்த வாய்ப்பில்லை,’ என்று முடிவு எடுக்கப்பட்டது. இது,தலைமை நீதிபதி அமர்விடமும் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.