×

65 ஆண்டுகளுக்கு பிறகு ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வருகை குறைவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 65 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் வருகை குறைந்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில், எப்பொழுதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படும். இதில், சாதாரண நாட்களில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்களும், விடுமுறை நாட்களில் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்களும்  தரிசனம் செய்து வந்தனர்.  தற்ேபாது, கொரோனா ஊரடங்கால், 80 நாட்களாக பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தது. பின்னர், கடந்த மாதம் 8ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கோயிலின் அர்ச்சகர்கள், ஊழியர்கள் உட்பட 160 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த  3 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்களை தேவஸ்தானம் ரத்து செய்தது.

300 தரிசன  டிக்கெட்டை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி, 9 ஆயிரம் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா பீதி காரணமாக, கடந்த ஒரு வாரத்தில் 40 ஆயிரத்து 805 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்துள்ளனர்.   இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை 4,250 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்தனர். கடந்த 1955ம் ஆண்டுக்கு பின்னர், இந்தளவுக்கு குறைந்தளவு பக்தர்கள் வந்து தரிசனம் செய்தது இதுவே முதல்முறை என்று தேவஸ்தான வட்டாரங்கள் கூறின.

Tags : devotees ,Ezhumalayan , Ezhumalayan Temple, Devotees
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி