சென்னை: சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நே.சிற்றரசுவை மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். ஜெ.அன்பழகன் மகனுக்கு இளைஞர் அணியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. தென் சென்னை மாவட்டம், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக 15 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தவர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ. இவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் 10ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நே.சிற்றரசுவை மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன், எம்.எல்.ஏ மறைவெய்திய காரணத்தால், மாவட்ட திமுக பணிகள் செவ்வனே நடைபெற நே.சிற்றரசு சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஜெ.அன்பழகன் மகனுக்கு பதவி: திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: சென்னைமேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த நே.சிற்றரசு அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
அவருக்கு பதிலாக, ராஜா அன்பழகன் சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக தலைமை கழக ஒப்புதலோடு நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜா அன்பழகன், மறைந்த ஜெ.அன்பழகன் எம்எல்ஏ மகன் ஆவார்.