கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுவாடா ஊராட்சியில் உள்ள செம்மண் சாலையில் உள்ள மோசமான பள்ளத்தால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுவாடா ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். சிறுவாடாவில் இருந்து கண்ணன்கோட்டை செல்லும் செம்மண் சாலையில் 10 ஆண்டுகளாக மிகப்பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. இதனால் அமரம்பேடு, பாஞ்சாலை, தேர்வாய்கண்டிகை, கண்ணன்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் தொழிற்சாலை உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு பைக், கார், சைக்கிள், லாரி உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சில நேரங்களில் இந்த சாலை பள்ளத்தில் விழுந்து அவர்கள் விபத்துகளிலும் சிக்குகின்றனர். மேலும், தற்போது பெய்த மழையில் தேங்கி நிற்கும் மழைநீரில் இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் பல நேரங்களில் இந்த பெரிய பள்ளங்களில் சிக்கி நகர்வதற்கு கூட வழியின்றி தடுமாறி நிற்பது அடிக்கடி நிகழ்கிறது. எனவ குண்டும் குழியுமாக உள்ள செம்மண் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.