×

வாடிக்கையாளர்களை பார்த்து குரைத்ததால் நாயை அடித்து கொன்ற மளிகை கடைக்காரர்: போலீசில் புளூகிராஸ் புகார்

தாம்பரம்: தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, காமராஜ் நகர், வ.உ.சி தெருவில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் துரைராஜ் என்பவர் நேற்று மதியம் அவரது கடையின் அருகே வந்த நாயை கட்டையால் தாக்கியதில் மயங்கி விழுந்தது. பின்னர் ஒரு கோணிப்பையில் அதை போட்டு மீண்டும் தரையில் ஓங்கி அடித்து அந்த நாயை கொன்றார். பின்னர், அந்த உடலை சாலையோரம் வீசினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து வேளச்சேரியில்உள்ள புளூ கிராஸ் அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த புளூ கிராஸ் அமைப்பை சேர்ந்த வேலு என்பவர், இதுகுறித்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் போலீசார் காவல் நிலைத்தில் ஆய்வாளர் இல்லை அவரிடம் கேட்ட பின்புதான் புகாரை பெறமுடியும் என மாலை வரை அலைக்கழித்து பின்னர் நடவடிக்கை எடுப்பதாக கூறி புகாரை பெற்றுக்கொண்டனர். இதுகுறித்து புளூ கிராஸ் அமைப்பை சேர்ந்த வேலு கூறுகையில், ‘‘மேற்கண்ட மளிகை கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை பார்த்து நாய் குரைப்பதாகவும், துரத்தி சென்றதாகவும், அதற்காகவே நாயை அடித்துக் கொன்றதாக விசாரித்ததில் தெரிய வந்தது. அவ்வாறு நாய் சாலையில் செல்பவர்களை கடிக்கும் நோக்கில் ஈடுபடுவதாக எங்களுக்கு புகார் அளித்திருந்தால், நாங்கள் வந்து சம்பந்தப்பட்ட நாய்க்கு தடுப்பு ஊசி போட்டு இருப்போம்.

ஆனால் அவ்வாறு செய்யாமல் நாயை அடித்து கொல்வது விலங்குகளின் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் 1960ன் படி குற்றமாகும். இந்த குற்றத்திற்கு சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யலாம். எனவே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்,’’ என்றார்.

Tags : Grocery store owner ,customers ,death ,Bluegrass , The customer, the grocer who beat the dog, complained
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...