சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்த வையில் நேற்று முன்தினம் வரை மாநகர காவல் துறையில் 1600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,118 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர். மாம்பலம் இன்ஸ்பெக்டர் பாலமுரளி, 2 எஸ்ஐ உட்பட 4 பேர் இதுவரை தொற்றில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த மாநகர காவல் துறை தலைமையிட இணை கமிஷனர் மகேஸ்வரி, திருவல்லிகேணி இன்ஸ்பெக்டர், ஐஸ்அவுஸ் இன்ஸ்பெக்டர், திருவல்லிக்கேணி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் உட்பட 68 பேர் நேற்று பணிக்கு திரும்பினர்.
அவர்களுக்கு வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கலந்து கொண்டு பணிக்கு திரும்பிய இணை கமிஷனர் மகேஸ்வரி உட்பட 68 போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து, அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.