சென்னை: ஜெர்மன், மலேசியா, இலங்கை, ஓமன் நாடுகளில் சிக்கி தவித்த 406 இந்தியர்கள் மீட்கப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். ஜெர்மனில் உள்ள பிராங்க்பர்ட் நகரிலிருந்து சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன்தினம் மாலை 56 இந்தியர்களுடன் சென்னை வந்தது. இவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். ஓமன் நாட்டின் மஸ்கட் நகரிலிருந்து சிறப்பு மீட்பு விமானம் 178 இந்தியர்களுடன் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. இலங்கையிலிருந்து வந்த சிறப்பு மீட்பு விமானத்தில் 28 இந்தியர்கள் நேற்று காலை சென்னை வந்தனர்.
கோலாலம்பூரிலிருந்து 144 இந்தியர்களுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் தனி விமானம் நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தது. இவர்களில் ஒரு பெண் உட்பட 40 பேர் பாஸ்போர்ட்கள் காலாவதி அல்லது சுற்றுலா விசாவில் சென்று சட்டவிரோதமாக அங்கு தங்கியிருந்தவர்கள். இவர்கள் மலேசிய அரசால் கண்டுபிடிக்கப்பட்டு கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டவர்கள். இவர்கள் 40 பேருக்கும் சென்னை விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டு, குரோம்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.