சென்னை: வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வேடசந்தூர் பகுதியில் 150 மிமீ மழை பெய்தது. இந்நிலையில் தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருவண்ணாமலை, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
மேலும், வடகடலோர தமிழகம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும். கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னை, மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.