சென்னை: புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு அணிந்து களங்கப்படுத்திய சம்பவத்திற்கு முதல்வர் எடப்பாடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்து களங்கப்படுத்திய செயல் புதுச்சேரியில் நடந்திருப்பது மிகுந்த மன வேதனையை தருகிறது. இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. சமீபகாலத்தில் இதுபோன்ற, சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது போன்ற இழிசெயல்கள் மிகுந்த வருத்தத்தை தருகிறது.
விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து, அவர்களை பின்னால் இருந்து இயக்கும் சமூக விரோதிகளையும் இனம் கண்டு, சமூகத்தின் முன்னும், சட்டத்தின் முன்னும் அவர்களை தோலுரித்து காட்டிட, கடுமையான விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள புதுச்சேரி முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.