சென்னை: கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு காரில் சென்றபோது, சீட்பெல்ட் அணியாததால் நடிகர் ரஜினிக்கு போலீசார் ரூ100 அபராதம் விதித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு தினமும் காரில் வந்து செல்வதாக தகவல் வெளியானது. அவரே காரை ஓட்டிச் செல்லும் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், சென்னை மண்டலத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்ட மண்டலத்திற்கு செல்ல ரஜினி இ-பாஸ் வாங்கினாரா என்று கேட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
மேலும், சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆய்வு செய்து சொல்வதாக அவர் தெரிவித்து ஒதுங்கிக் கொண்டார். இந்நிலையில், 23ம் தேதி கேளம்பாக்கம் செல்ல மெடிக்கல் எமர்ஜென்சி என்று சொல்லி இ-பாஸ் பெற்றதாக ரஜினி தரப்பில் இருந்து தகவல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி ரஜினி சென்னையில் இருந்து கேளம்பாக்கம் வரும்போது நாவலூரில் போலீசார் வாகன சோதனை நடத்தி உள்ளனர். அப்போது சீட் பெல்ட் போடாமல் இருந்ததால் அவருக்கு ₹100 அபராதம் விதித்துள்ளனர்.
அந்த தொகையை நேற்று முன்தினம் 23ம் தேதி ரஜினி செலுத்தியதாக கூறி அதற்கான ரசீதை தாழம்பூர் போலீசார் வெளியிட்டுள்ளனர். தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி இந்த அபராத தொகையை வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீட் பெல்ட் போடாமல் பயணித்ததற்காக அபராத தொகையை வசூலித்த போலீசார் அவரிடம் இ-பாஸ் எடுத்தாரா என்று ஏன் கேள்வி எழுப்பவில்லை என்ற சந்தேகம் வலுத்துள்ளது.