×

கொரோனா சிக்கல் இருந்த போதிலும் மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்த வேண்டும்: பிரதமர் பேச்சு

புதுடெல்லி: ‘‘ கொரோனாவை எதிர்த்து தீவிரமாக போராட வேண்டும். அதேநேரம், மேம்பாட்டு திட்டங்களையும் முழு சக்தியுடன்அமல்படுத்த வேண்டும்,’’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் 16 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 80 ஆயிரத்து 756 வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கும் திட்டம், ரூ.3054.58 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்லை, டெல்லியில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலமாக பிரதமர் மோடி நேற்று நாட்டினார்.

அப்போது பேசிய அவர், ‘‘நமது நாட்டில் ஊதுவர்த்திக்கு அதிகளவில் தேவை இருக்கிறது. இதற்கு தேவையான மூங்கில்கள், பல நூறு கோடி ரூபாய் செலவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. உள்ளூர் உற்பத்தியின் மூலம், இந்த இறக்குமதியை நிறுத்தும் சக்தி, வடகிழக்கு மாநிலங்களுக்கு உள்ளது. கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு இடையிலும், மேம்பாட்டு திட்டங்களை அரசு நிறுத்தவில்லை. இந்நோய்க்கான மருந்து உருவாக்கப்படும் வரையில், கொரோனாவுக்கு எதிராக நாம் தீவிரமாக போராட வேண்டும். மேம்பாட்டு திட்டங்களை முழு சக்தியுடன் அமல்படுத்த வேண்டும்,’’ என்றார்.

Tags : speech , Corona issue, development plan, implementation, PM speech
× RELATED ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை காக்க...