×

மகன்கள் அரவணைப்பு இல்லாததால் வயதான தம்பதி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

சென்னை: பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (62), செக்யூரிட்டி. இவரது மனைவி செல்வி (52). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில், 2 பேர் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். இளைய மகன் ஸ்ரீதர் (26) என்பவருடன் பெற்றோர் வசித்து வந்தனர். ஸ்ரீதர் அடிக்கடி குடித்துவிட்டு தனது பெற்றோருடன் தகராறு செய்து வந்ததாகவும், சரிவர கவனிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. திருமணமான மற்ற 2 மகன்களும் பெற்றோரை வந்து பார்ப்பதில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், மன உளைச்சலில் இருந்த தம்பதி, நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வீட்டில் உள்ள மின்விசிறியில் ஒரே புடவையால் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இரவு வீட்டுக்கு சென்ற ஸ்ரீதர் பெற்றோர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த செம்பியம் போலீசார், சடலங்களை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அந்த வீட்டில் சோதனையிட்டபோது கடிதம் ஒன்று சிக்கியது. அதில், ‘‘எங்களது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. எங்களை அனாதை என்று நினைத்து எங்களது உடல்களை போலீசார் அடக்கம் செய்து விடுங்கள்,’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மகன்கள் கேட்டுக்கொண்டதால், அவர்களின் உடல்கள் மகன்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி சடங்கில் போலீசாரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

Tags : sons , Sons warmth, aging couple, suicide, heartbreaking letter
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி