×

பேஸ்புக் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து தொழிலதிபரிடம் நகை பறித்த பாலிடெக்னிக் மாணவன் கைது

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் மேற்கு இ.பி.அலுவலக சாலையை சேர்ந்தவர் வடிவேல் (44), தொழிலதிபரான இவர், ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘‘பேஸ்புக்கில் உள்ள எனது புகைப்படத்தை எடுத்த மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக மார்பிங் செய்துள்ளார். பின்னர், என்னை தொடர்பு கொண்டு, அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டும் எனில் நகை, பணம் கேட்டு மிரட்டினார். தொடர்ந்து, எனது முகவரியை கண்டுபிடித்து, வீட்டுக்கே வந்து 5 சவரன் செயினை பறித்து சென்றார். மேலும், பணம் கேட்டு மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என தெரிவித்து இருந்தார்.

போலீசார் விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த ஆல்வின் (20) என்பவர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் டிப்ளமோ படித்து வரும் ஆல்வின், விலை உயர்ந்த பைக் வாங்க வேண்டும் நினைத்துள்ளார். அதற்கு பணம் இல்லாததால், பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ள வசதியானவர்களை தேர்வு செய்து, அவர்களின் புகைப்படத்தை எடுத்து ஆபாசமாக மார்பிங் செய்து, சம்மந்தப்பட்டவர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். அதன்படி, தொழிலதிபர் வடிவேலை மிரட்டி, சென்னைக்கு வந்து நகை பறித்ததும், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் போலீசில் சிக்கியதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 5 சவரன் செயினை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை சிறையில் அடைத்தனர்.


Tags : Polytechnic student ,student ,Polytechnic , Facebook photo, porn morphing, businessman, jewelry robbery, student arrested
× RELATED சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம்...