×

இந்தியாவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 45,720 பாதிப்பு பலி எண்ணிக்கை 1,129 பேர்

புதுடெல்லி: நாட்டில் எப்போதும் இல்லாத வகையில், புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 45,720 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதேபோல், 1,129 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பும், பலியும் நாடு முழுவதும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 1ம் தேதியில் இருந்து நேற்று வரையிலான காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 22 நாட்களில் மட்டுமே நாடு முழுவதும் 6 லட்சம் பேர் பாதித்துள்ளனர். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். இந்த நிலையில், நாட்டில் கடந்த 7 மாதங்களில் இல்லாத வகையில், நேற்று ஒரே நாளில் பாதிப்பும், பலியும் புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. தினமும் 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்படும் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை நாடு முழுவதிலும் இருந்து சேகரித்து, மறுநாள் காலை 8 மணிக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.

அதன்படி, நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 45,720 பேர் பாதித்துள்ளதை தொடர்ந்து, மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 38 ஆயிரத்து 635 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், பலி எண்ணிக்கையில் புதிய உச்சமாக 1,129 பேர் இறந்துள்ளனர். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 29,861 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10,576, தமிழ்நாட்டில் 5,849, கர்நாடகாவில் 4,764 பேர் என 45,720 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இவற்றில் முறையே 3.37, 1.86, 1.26 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 50 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் பலியானவர்களில் தமிழ்நாட்டில் அதிகளவாக 518, மகாராஷ்டிராவில் 280, ஆந்திராவில் 65, கர்நாடகாவில் 55 என மொத்தம் 1,129 பேர் வைரசால் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* 1.5 கோடி பரிசோதனை
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக அறிக்கையின்படி, நேற்று முன்தினம் சேகரிக்கப்பட்டுள்ள 3 லட்சத்து 50 ஆயிரத்து 823 மாதிரிகளையும் சேர்த்து, இதுவரை மொத்தம் 1 கோடியே 50 லட்சத்து 75 ஆயிரத்து 369 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags : India , India, in a single day, 45,720 victims, 1,129 people killed
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!