பெய்ஜிங் : செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக சீனா தியான்வென்-1 என்ற விண்கலத்தை இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் அமெரிக்கா, ஐரோப்பியா, ரஷியா, இந்தியா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளன. செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா மங்கள்யான் என்ற விண்கலத்தை ஏற்கனவே அனுப்பி ஆய்வு நடத்தி வருகிறது. கடந்த 20-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியது. ஜப்பானில் இருந்து இந்த விண்கலம் செயற்கைக்கோள் மூலம் ஏவப்பட்டது.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்திற்கு சீனா தியான்வென்-1 என்ற விண்கலத்தை இன்று ஹைனன் தீவில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து ஏவியது. லாங் மார்ச் 5 என்ற சீனாவின் மிகப்பெரிய ராக்கெட் மூலம் ஹைனன் தீவிலிருந்து இன்று ஏவப்பட்டது. 36 நிமிட பயணத்திற்குப் பிறகு புவி-செவ்வாய் மாற்று சுற்றுவட்ட பாதையை அடைந்ததாக சீனா தெரிவித்துள்ளது.இது 5.5 கோடி கிலோ மீட்டரை 7 மாதம் பயணித்து பிப் 2021-ல் செவ்வாய் கிரகத்தை சென்றடையும். இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தின் மண்ணை ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், ஒரு லேண்டர் மற்றும் ஒரு ரோவர் கருவிகளை கொண்டுள்ளது.
செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையை ஆர்பிட்டர் சென்று அடைந்ததும், அதில் இருந்த லேண்டர் பிரிந்து செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கும். பின்னர் லெண்டரில் இருந்து ரோவர் என்ற ஆய்வு வாகனம் ஒன்று வெளியேறி ஆய்வு பணிகள் மேற்கொள்ளும். சீனா ஏற்கனவே 2011-ம் ஆண்டு ரஷ்யாவுடன் இணைந்து செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. தற்போது சொந்தமாக விண்கலத்தை அனுப்பியுள்ளது.