சென்னை: புதுச்சேரி அரசு அறிவித்திருப்பது போன்றே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றில் சலுகை அளிக்க வேண்டியதற்கான தேவை இருப்பதாக மாணவர்கள் கூறியுள்ளனர். புதுச்சேரியில் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் போது வருவாய் நிர்வாகம் வழங்கும் சான்றிதழ் கட்டாயமில்லை என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்திலும் சான்றிதழ் சமர்பிப்பதில் சலுகை அறிவிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்குக்கான மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது. கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் சாதி சான்று, வருமான சான்று, சிறப்பு பிரிவினருக்கான சான்று உள்ளிட்டவற்றை சமர்பிக்க வேண்டியுள்ளது. சான்றிதழ் சமர்பிப்பதில் பல நடைமுறை சிக்கல் இருப்பதாக திருச்சியை அடுத்த வாலாடியில் இருக்கும் மாணவர் ஹரிபாலன் கூறுகிறார். வருமான சான்று பெறுவதற்கு இ - சேவை மையத்தை நாடும் போது, ஒரே நேரத்தில் பலர் விண்ணப்பிப்பதால் சர்வர் கோளாறுகள் உள்ளதாக தெரிவிப்பதாகவும், தான் விண்ணப்பித்திருக்கும் கல்லூரிகளில் குறிப்பிட்ட நேரத்தில் சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடியுமா என்று மாணவர் ஹரிபாலன் அஞ்சுகின்றனர்.
ஹரிபாலன் போன்ற பல மாணவர்கள் இதுபோன்ற பல சிக்கல்களை ஊரடங்கு காலத்தில் சந்திக்கின்றனர். இணையவழியில் சான்றிதழ்களை வழங்குதல், அல்லது புதுச்சேரி போன்று கல்லூரியில் சேர்ந்த பிறகு சான்றிதழ்களை காண்பிக்கலாம் என்ற சலுகையோ வழங்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. மேலும் கொரோனா காலத்தில் போக்குவரத்து இல்லாததால் மாணவர்கள் இன்னலுக்குள்ளாகும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.